மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா?

Saturday 15 October 2011

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா.

தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள். வீட்டு வேலைகளை நீங்கள் செய்து அசத்துங்கள். நீங்கள் அவ்வாறு பெயருக்கு சொன்னால் கூட வேணாமுங்க, வாரம் முழுவதும் ஓயாது உழைக்கிறீங்க. சனி, ஞாயிறு நிம்மதியா ஓய்வு எடுங்க, வீட்டு வேலைகளை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி உங்களை வேலை செய்யவிடமாட்டார். 



அது தான் மனைவியே சொல்லியாச்சுல நாம் போய் கால் மேல காலப்போட்டு டிவி பார்ப்போம் என்று சென்றுவிடாதீர்கள். நீயும் தான கண்ணு தினமும் உழைக்கிற இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடு என்று சொல்லி வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். மனைவி உச்சி குளிர்ந்து போவார்.

எதிர்பாராத நேரத்தில் கட்டித் தழுவி அன்பாக ஒரு முத்தம் கொடுங்கள். ஆஹா, என் புருஷனுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போய்விடுவார். திடீர் என்று ஏதாவது ஒரு பரிசு கொடுத்து அசத்துங்கள். மனைவி வேலைக்கு செல்பவரா? அவரை ஊக்குவியுங்கள். அதனால் அவர் இன்னும் திறமையாக பணிபுரிவார். அலுவலகப் பிரச்சனைகளைக் கூறினால் முடிந்தால் தீர்வு காண உதவுங்கள்.

மனைவியை மனதாரப் பாராட்டுங்கள். அது அவரின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு சிலு, சிலுவென்று காற்று வீசுகையில் மனைவியின் காதருகில் சென்று ஐ லவ் யூ என்று சொல்லுங்கள். அவர் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தால். ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று சொல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

டிவி பார்க்கையில் எப்பொழுதுமே உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் மனைவிக்கு பிடித்த சேனலை வைத்து இருவரும் சேர்ந்து பாருங்கள். (நாங்க எங்க எங்களுக்கு பிடித்த சேனல் பார்க்கிறோம், எப்ப பார்த்தாலும் சீரியல் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

நீங்கள் எப்பொழுது அவரை முதன்முதலாகப் பார்த்தீர்கள். நிச்சயதார்த்தத்தில் எப்படி ஓரக்கண்ணால் பார்த்தீர்கள், திருமணத்தில் உங்கள் மனைவி எப்படி வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி நின்றார், குழந்தை பிறந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பது போன்று பேசுங்கள். இதெல்லாம் எத்தனை தடவை பேசினாலும் அலுக்காத ஆனந்த விஷயங்கள்.

0 comments:

Post a Comment