போலித் தமிழ்த்தேசியவாதிகளே.. என்னதான் செய்கிறீர்கள்!?

Monday 20 June 2011



(கீற்று தளத்தில் வெளியான கட்டுரை இது. இங்கே அதன் unedited versionஐ பதிந்திருக்கிறேன்.)

 இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, 'தமிழ் தேசியம், தமிழ் தேசியம்' என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது!

தமிழீழப் போராட்டத்தின் தற்காலிகத் தோல்விக்குப் பின்னர், தமிழகத்தில் ‘தமிழ் தேசியத்தை’ முன்னெடுத்திருப்போரான நாம் தமிழர் இயக்கத்திற்கு, அக்கொள்கையை கடைசி குடிமகன் வரை சென்று சேர்த்த பெருமை உண்டு. அதுவரையிலும் தீவிரவாதமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு சொல், கடைசி குடிமகன் காதிலும் கொள்கையாய் சென்று சேர்ந்ததின் பின்புலத்திலும் சீமானே தனியொரு ஆளாக கம்பீரமாய் நிற்கிறார். அதேபோல் தைரியமாக, தனிமனிதனாக அரசுக்கு எதிராக செயல்பட்டும், பேசியும், துணிவாய் எதிர்த்து சிறை சென்ற அவரின் தைரியத்தையும் நாம் கண்டிப்பாய் பாராட்டவே வேண்டும்.

சீமானுடன் முன்பிருந்த தமிழ் உணர்வாளர்களை, அவர் அருகில் தற்போது நெருங்க விடாமல், ஒரு 'கும்பல்' அவரைச் சுற்றி அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. அதனாலேயே முன்பிருந்த உணர்வுக்கு மாறாய். முன்னுக்குப் பின் முரணான முடிவுகளை அவர் எடுப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன! அது நமக்குத் தேவையில்லை! அதனால் அந்தக் கட்சியின் தலைவர் சீமான் தான், அதனாலேயே அக்கட்சியின் செயல்பாடுகளை சீமானின் செயல்பாடுகளாகவும், சீமானின் செயல்பாடுகளை கட்சியின் செயல்பாடுகளாகவும் நாம் விமர்சிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அந்தக் கும்பல் அவர் பின் கூடிய பின்பு, அவர்கள் நடத்தும் கட்சியின் அரசியல் நிலைப்பாடும், 'அவர்கள்' முன்வைக்கும் தெளிவற்ற தமிழ்தேசியமும் அவர்கள் கொள்கைப் பிடிப்பின் மீது பலத்த சந்தேகத்தையும், தமிழ்தேசியம்-தீவிரவாதம் என்று இருந்தது மாறி, இன்னும் மோசமாய், ஒரு கேலிப்பொருளாய் ஆகிவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது!

நாம் தமிழர் கட்சி உண்மையில் 'தமிழ் தேசிய'த்தை முன்மொழிபவர்களாய் இருந்தால் அவர்களும் அவர்களை இன்னும் நம்பி, தமிழ் தேசியம் 'இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்' என்று நம்பும் 'வெகுசில' உண்மையான உணர்வுள்ள இளைஞர்களும் ஒன்றை தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்பது ஆட்சியாளர்களை எதிர்த்துப் பெறக் கூடிய ஒன்றல்ல. தமிழ் தேசியம் என்பது ஆட்சியாளர்களையும் கூட ஆட்சி செய்யும் 'இந்திய அரசியல் அமைப்பு'ச் சட்டத்தை எதிர்த்து பெறப்படவேண்டியதே ஆகும். அதாவது தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரி கலைஞரோ, ஜெயலலிதாவோ, சோனியாவோ அல்ல. அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்! இதை இன்னும் சற்று தெளிவாய் விளக்க வேண்டுமென்றால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்புலத்தைப் பார்க்க வேண்டும்!

இரண்டு வகையாக ஒரு நாட்டின் சட்டத்தைச் சொல்வார்கள். எப்போதுமே அடிமைத்தனத்தையே சந்தித்திராத இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களை 'Flexible constitution' (நெகிழும் சட்டம்) ஆக வைத்திருக்கின்றன. இது போன்ற நாடுகளில் சட்டத்திருத்தங்கள் செய்ய ரொம்ப மெனக்கெட வேண்டாம். அடிமைத் தனத்தைச் சந்தித்து, போராட்டத்தால் விடுதலை பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகள், இனி உள்நாட்டுப் பிரச்சினைகளும், போராட்டங்களும் வெடிக்கவே கூடாது என்பதற்காக தங்கள் சட்டங்களை 'Rigid constitution' (நெகிழா சட்டம்) ஆக வைத்திருக்கின்றன! இந்நாடுகளில் சட்டத்திருத்தங்கள் என்பது மகாப்போராட்டம்! சாதாரணமாக தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்ட 'ஓரினச் சேர்க்கை' பிரச்சினைக்கு சட்டத்திருத்தம் செய்யவே அம்மக்கள் 'ஓரினச்சேர்க்கை' பிரச்சினைக்கே அம்மக்கள் எவ்வளவு போராடினார்கள் என்பதே இதற்கு நல்ல உதாரணம்!

ஆனால் இந்தியா இந்த இரண்டிலுமே சேராமல், 'பகுதி நெகிழா-பகுதி நெகிழும்' சட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு நாடு. அதாவது ஒன்றுக்கும் உதவாத சட்ட திருத்தங்களை எல்லாம் சுலபமாக கொண்டு வரமுடியும். ஆனால் மாநிலத்தைப் பிரிப்பது, சுயாட்சி, இனவிடுதலை போன்ற மிகமுக்கிய விஷயங்கள் சம்பந்தப்பட்ட சட்ட திருத்தங்களை எப்பாடுபட்டாலும் கொண்டு வரவே முடியாது! ஒருவேளை முயன்றால், அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகிவிடும். உடனே அந்தப் போராளி தீவிரவாதி எனக் கொல்லப்படுவான் அல்லது சிறைதான்!  அவசர நிலை பிரகடனம் செய்யக் கூட அதிகாரம் இருக்கும் இந்திய ஜனாதிபதியை ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும்தான் பதவி இறக்கம் செய்ய முடியும். அவர் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டால் மட்டுமே! இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவ்வளவு மகாபலம் பொருந்தியது என்பதற்கு இதுவே சான்று.

 தங்கள் முன் இருக்கும் இத்தகைய பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த தமிழ் தேசியவாதிகள் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும், ஆனால் நம்மிடையே உணர்வாளர்கள் என்ற போர்வையில் உலா வரும் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எதற்கும் அடங்காமல் இருப்பதற்கு சக்தியுடையதாய் இருந்த தங்கள் 'இயக்கத்தை', சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கட்சியாய் மாற்றுகிறார்கள். மாற்றியதும் அல்லாமல் 'ஒரு' கூட்டணிக்கு தங்கள் ஆதரவு எனச் சொல்கிறார்கள். பின் பத்தே நாளில் 'இல்லை'யெனக் கதறி வேறு ஒரு விளக்கமளிக்கிறார்கள். இவர்களா சகலபலமும் பொருந்திய ஜனாதிபதியின், பிரதமரின் கழுத்தையே நெறிக்க வல்லமை பொருந்திய இந்திய சட்டங்களை எதிர்த்து தமிழ் தேசியம் வாங்கப் போகிறார்கள். அதிமுக வில் எப்படி சம்பந்தமேயில்லாமல் 'திராவிடம்' ஒட்டிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் தான் இவர்கள் மேல் இன்னும் 'தமிழ் தேசியவாதிகள்' சாயம் ஒட்டிக்கொண்டிருக்கிறது!

இவர்கள் ஏன் இன்னும் தமிழ் தேசியவாதிகள் போல தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்? வெளிப்படையாய் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு இயங்கும் தமிழக அரசியல்வாதிகளாகவே தங்களைக் காட்டிக் கொள்ளலாமே! இதற்கும் ஒரு ஊரறிந்த ரகசிய பதில் உண்டு.

அவர்கள் கூட்டிய கூட்டம் எல்லாம், நமக்கு சிங்களன் எதிரி என ஆரம்பித்து, பின் மெதுவாக தெலுங்கன், மலையாளத்தான், கன்னடத்தான் ஆகியோர் எல்லாருமே நம் எதிரிகள் என்பதை ஒரு சுற்று சுற்றி, கடைசியில் பெரியார் முன்வைத்த திராவிடம் தான் நம் முழுமுதற் எதிரி, அதனால் தான் நாசமாய்ப் போனோம், என உணர்ச்சிகரமாய் உரையை முடித்து கூட்டிய கூட்டம். அந்த உணர்வான இளைஞர்கள், இவர்கள் திடீரென தமிழ் தேசியக் கொள்கையை உதறினால் களைந்துபோகவோ, காறித்துப்பவோ வாய்ப்புண்டு. அதனாலேயே இன்னும் தமிழ் தேசியக் கொள்கையை பிடித்துத் தொங்கவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.

தமிழக அரசியலுக்கு வந்த பின்னும், அனைத்து தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் தமிழனுக்கு எதிரியாக சித்தரிக்கும் இவர்கள், மீனவன் சுடப்படும்போதெல்லாம் நாம் இந்திய அரசை குற்றம் சாட்டும் நேரத்தில், சந்தர்ப்பவாதத்திற்காக இந்திய சட்டத்துக்கு உட்பட்ட அரசியல் கட்சியாக மாறி, எப்படி இந்திய அரசுடன் கூட்டு வைக்கலாம்? (அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்டுவிட்டாலே அது சட்டத்துடன் வைக்கிற கூட்டுதான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) அப்படியே இந்த சந்தர்ப்பவாதத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் கூட நாமும் ஏற்கலாம். ஆனால் தற்போது இவர்கள் மூன்றாவது அரசியல் கூட்டணியை மக்கள் முன்பு முன்வைக்காத காரணத்தால் இவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிஜேபி ஆதரவாகவும், திமுக எதிர்ப்பு அதிமுக ஆதரவாகவுமே பார்க்கப்படும்!

ஒருவேளை இவர்கள் தங்கள் பரப்புரையில் வெற்றி பெற்று திமுகவையும், காங்கிரசையும் விரட்டி விட்டால், நாளை மத்தியிலும், மாநிலத்தில் இவர்கள் ஆதரிக்கும் கட்சிகளே (பாஜக, அதிமுக) ஆட்சிக்கு வருமே, அப்போது கண்டிப்பாக ஈழத்தமிழ்தேசியமாவது அமையுமா என இவர்களால் சொல்ல முடியுமா? எந்த ஒரு ஆட்சியாளரும் அவ்வளவு சுலபமாக ஈழத்தைப் பெற்றுத்தர முடியாது. தமிழ்தேசியத்திற்கு இந்திய அரசியல் சட்டம் எவ்வளவு பெரிய எதிரியோ, ஈழதேசியத்திற்கும் அது அவ்வளவு பெரிய எதிரிதான். இவர்களின் சுயலாபத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் உயிர் கொடுத்து, ஒரு இனத்தலைவன் தன் உயிரைக் கொடுத்து பெற முற்பட்ட விடுதலையையே கொச்சைப் படுத்தி, தமிழக அரசியல் சாக்கடையில் அதையும் கலக்கப் பார்க்கிறார்களேயன்றி, கருத்து வேறில்லை.

தமிழர்களை விரட்டியடித்த பால்தாக்கரேவை "பெருமகனார்" எனப் புகழ்ந்த இவர் முன்வைக்கும் தமிழ்தேசியம் அமைந்தாலோ அல்லது இவரே முதல்வர் ஆனாலோ, தமிழகத்தில் ஏற்கனவே நொந்து வாழும் தெலுங்கு பேசும் அருந்ததியினர் போன்ற மக்களை அடித்துவிரட்டுவாரோ என்ற கேள்வியும் எழுகிறது! 

“போர் என்றால் சாகத்தானே செய்வார்கள்” என்று மிகச்சாதரணமாகச் சொல்லி இதுவரை உலக வரலாற்றில் கலிங்கப் போரில் ஆரம்பித்து, வியட்நாம் போர், ஈழப்போர் என அனைத்து போர்களிலும் கொல்லப்பட்ட கோடிக்கோடிக்கணக்கான அப்பாவி மக்களையெல்லாம் அஃறிணையாக்கிப் போனவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்பது குழந்தைக்கு கூடத் தெரியும். அவரா  ஈழ மக்களுக்கு ஈழம் வாங்கித் தருவார்? நிலைமை இப்படியிருக்கும் போது இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட கட்சியாய் இருக்கவேண்டிய தேவை இவருக்கு என்ன?

வேறு ஒரு பதிலும் வைத்திருக்கிறார்கள்! அதாவது கலைஞர் செய்த தவறுக்கு அவரை பழிவாங்க வேண்டுமாம்! என்னே ஒரு லாவகமான புரட்சிகரமான சிந்தனை! இந்தத் தடவை கலைஞரை பழி வாங்க ஜெயலலிதாக்கு ஓட்டு போட்டுவிடலாம்! கண்டிப்பாக ஜெயலலிதா தன் வேலையைக் காண்பிப்பார்! பின் ஜெயலலிதாவை பழிவாங்க கலைஞருக்கு ஓட்டுப் போட்டுவிடலாம்... பின் அடுத்த.......... இப்படியே சுத்தி வருவதுதான் புரட்சியா? எனக்குப் புரியவில்லை!

புரட்சி என்றால் ‘மாற்று’ என்றல்லவா இந்நாள் வரை நினைத்துக் கொண்டிருந்தேன்! புரட்சி என்றால் ‘மாற்றி மாற்றி உட்கார வைப்பது!’ என்ற ‘புதியபுரட்சி’ அறியாத மூடனாக அல்லவா இருந்துவிட்டேன் நான்! யாரைப் பழி வாங்குவதாய் நினைத்து யாரைப் பழி வாங்குகிறார்கள் இவர்கள்? அவர்கள் தான் ஒரே மாற்று என நம்பிய சில தமிழ்மக்களையும், பல ஈழமக்களையும் அல்லவா பழி வாங்கிக் முற்படுகிறார்கள்! ஈழம் அமைய தற்போதைக்கு இருக்கும் சூழ்நிலைகளைவிட நாளை இவர்களால் (அமைந்தால்) அமையப் போகும் அரசியல் சூழ்நிலை ஈழத்திற்கு இன்னும் ஆபத்தாகவே முடியும்!

ஒரு 'system'ஐ திருத்த வேண்டுமானால் அந்த 'system'த்திற்குள் இருக்க வேண்டும். ஒரு 'system'த்தை உடைக்க வேண்டுமானால் கண்டிப்பாக அந்த 'system'த்திற்கு வெளியில் நின்றால் தான் அது முடியும். உலகில் அடிமைப்பட்டிருந்த இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் நமக்கு சொல்லிக்கொடுப்பது இதைத்தான். உள்ளே நின்று கொண்டு "உடைப்பேன், திருப்பி அடிப்பேன், மடக்கிக் குத்துவேன்" என முழங்கினால் உள்ளே தள்ளுவார்கள் அல்லது பச்சோந்தியெனப் பின்னால் நகைப்பார்கள். இதைத்தான் தற்போது தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் இந்திய-தமிழக போலித்தமிழ்தேசியவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசியத்தை செயல்படுத்துவதற்கான சூழ்நிலை மாற்றம் மக்கள் மனநிலையிலும், அரசியல் நிலைமையிலும் ஒரே தேர்தலில் ஏற்பட்டுவிடாது. பல வருட அர்ப்பணிப்பும், எதையும் எதிர்பாராத லட்சியவெறியும், தணியா கொள்கையும் மக்கள் நலனையே மனதில் கொண்ட தொடர் போராட்டங்களும், விளக்க உரைகளும், தொடர் புரட்சியும் தேவை. வெற்றி பெற பல காலம் பிடிக்கும்.

அதுமட்டுமல்லாது பெரியாரிடம், அம்பேத்கரிடம், பிரபாகரனிடம் இருந்தது போன்ற தன்னமில்லா கொள்கையும் தேவை! அதை விடுத்து இவனைப் பழிவாங்க அவன். அவனைப் பழி வாங்க இவன் என அரசியல் செய்தால் தமிழனுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பும் மரியாதையையும் கூட அது குலைத்து கருவறுத்து விடும்.

இப்படிப்பட்டதான ஒரு சந்தர்ப்பவாத, காட்டுமிராண்டி அரசியலை முன்னெடுக்கும் போலி தமிழ்தேசியவாதிகளால் நமக்கு கனவில் ஒரு 'தமிழ்த்தேசியம்' கிடைத்தாலும் கூட அது நரமாமிசம் உண்ணும் ஒரு நாகரீகமற்ற தேசியமாகத்தான் இருக்கும்.  உண்மையான தமிழ்தேசியவாதிகள் கனவு கண்ட மானமிக்க, அறிவுமிக்க, நாகரீகம் மிக்க ஒரு சமூகமாய் இராது.

மேலுள்ள பத்திகளில் இருக்கும் கேள்விகளையும், குமுறல்களையும் இணையத்திலோ வேறெங்கோ எழுதினால் 'இவன் திமுக, அதிமுக, முமுக, மதிமுக, வி.சி, பு.த, பா.ம.க' போன்ற முத்திரைகள் தான் இதுவரைக்கும் குத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் "நீ தெலுங்கனா, கன்னடனா, மலையாளியா?" என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அநாகரீகத்தின் உச்சகட்ட உருவத்தில் நிகழ்த்தப்படும் அரசியலைப் பற்றி கவலைப் படாமல் அவர்களின் உண்மை முகத்தையும், போலிதமிழ்தேசியத்தையும் விமர்சிக்கும் கடமை யாவருக்கும் உண்டு. நன்றி

0 comments:

Post a Comment