உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம்

Thursday 3 March 2011

உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மேற்கத்திய நாடுகளில் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும்.
நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் என்பது ரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும்.
இது இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம்(சிஸ்டோலிக்) மற்றொன்று இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம்(டயஸ்டோலிக்). அதாவது 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு.
139/89 என்பது உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை. 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது. வயது ஏற ஏற ரத்தக் குழாய்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை இழந்து தடித்து விடுகின்றன. இந்த பாதிப்பு ஏற்படும் போது சிஸ்டோலிக் அழுத்தம் மட்டும் அதிகரித்து காணப்படும். 60 வயதை தாண்டிய 70 சதவீதத்தினருக்கு இது போன்ற ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
வயது அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு, பாரம்பரியமாக ரத்த அழுத்தம் ஏற்படும் தன்மை, சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், சுரப்பி நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், கார்ட்டிகோஸ்டிராய்டு, கருத்தடை மாத்திரைகள் மற்றும் உடல் எடை குறைப்பு மாத்திரைகள் சாப்பிடுவது ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பிறப்பிலேயே ரத்தக் குழாய்கள் சுருங்கி காணப்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
ரத்த அழுத்தத்தைச் சீராக்க நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உடல் எடை அதிகரிக்கும் போது ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும்.
எனவே இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

0 comments:

Post a Comment