பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன

Thursday 20 January 2011

சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர். ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம். குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது. கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

0 comments:

Post a Comment