பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள்

Saturday 22 January 2011

கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் ஒற்றையடிப் பாதையில் உள்ளது ஆத்துப்பால சுடுகாடு. இங்குதான் அநியாய வட்டிக்காரர்களை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள் நடமாட்டம்
இருப்பதாக அச்சத்தில் உறைந்து போய் கிடக்கிறார்கள் அப்பகுதிக்காரர்கள்.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்காரர் ஒருவர் இப்பகுதியை கடந்த போது, அவருக்கு நேர்ந்த கதியை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. நள்ளிரவு 12 மணியளவில் சுடுகாடு அருகே சைக்கிளில் சென்ற போது, வெள்ளையாய் உருவம் திடீரென தோன்றி ஆக்ரோஷமாயகத் தாக்க.. கையில் வைத்திருந்த பையோடு கீழே சரிந்தார். பை நழுவி ஆற்றில் விழ, அதை எடுக்கக் கூட நினைவில்லாதவராய், பித்து பிடித்தது போல ஆனார். அப்படியே வீட்டுக்கு வந்து படுத்தவர்தான். எழுந்திருக்கவே இல்லை. இரண்டே நாளில் வட்டிக் கடைக்காரர் மூச்சு நின்று போனது. அது முதல் ஆத்துபால சுடுகாட்டில் ஆவிகள் உலவுவதாக அச்சப்படத் தொடங்கினார்கள்.

அதன்பிறகு அந்த பகுதியை கடந்த வட்டிக்காரர்களும் மர்மமான முறையில் சாக, பயம் பற்றிக் கொண்டது. வட்டிக்காரர்களை பேய்கள் பழிவாங்குவதாக நினைத்தனர்.  ‘மரணத்தில் சந்தேகம் இருக்கு... பொலிஸ் விசாரிச்சா உண்மை தெரியும்’ என்ற பேச்சு எழாமல் இல்லை. ‘ஆவி அடிச்சிருக்கு... வைத்தியம் பாத்தா தப்ப முடியுமா? பொலீசு அது இதுன்னு போனா ஆபத்துதான்’ என்று ஒரு பூசாரி சொல்ல, ஊரே அமைதியானது.

இப்போதும் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வதற்கே, கிராமவாசிகள் பயப்படுகிறார்கள். குறிப்பாக சுடுகாட்டை தாண்டும் வரை, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் செல்கிறார்கள். ‘என்னடா பண்ணும் ஆவி.. பாத்துருவோம்’ என்று மூன்று இளைஞர்கள் துடிப்பாக கிளம்ப, ஊர் மக்கள் எச்சரித்தனர். நள்ளிரவு கடந்த நேரத்தில் சுடுகாட்டுக்கு சென்ற இளைஞர்கள் மறுநாள் காலை வரை வரவில்லை. ஊர்மக்கள் சென்று பார்த்தபோது மூவரும் சுடுகாட்டில் மூர்ச்சையாகி கிடந்தனர். அவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பிய போது, நள்ளிரவில் வெள்ளையாய் உருவத்தைப் பார்த்து மயங்கி விழுந்து விட்டதாக கூற அச்சம் உச்சமானது.

இதையடுத்து, ஆறு மாத இடைவெளிகளில் திடீரென அந்த வழியாக நள்ளிரவில் வருபவர்களை ஆவி தாக்குவதாக சம்பவங்கள் நடந்தன. இதில் நால்வர்  வரை வீட்டுக்கு வந்து மூர்ச்சையாகி இறந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவருமே வெளியூரில் இருந்து வந்து, இங்கு வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள்.

‘வட்டிக் கொடுமைல பாதிக்கப்பட்டவங்க சில பேரு, வட்டிக்காரங்க கொடுமை தாங்காம இங்கே தற்கொலை பண்ணிருக்காங்க. அவங்க ஆவிதான் அநியாய வட்டிக்காரர்களை பழி வாங்குது. அமாவாசை, தேய்பிறை நாட்கள்லதான் ஆவிக உக்கிரத்தோட இருக்கும். சுடுகாடு பகுதியில இருக்கற மரத்தில்தான் ஆவிக இருக்கு’ என்று ஊர் பூசாரி சொல்கிறார்.

சுடுகாடு மற்றும் எதிரில் மரம் உள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் போட்டால், உடனுக்குடன் ‘பியூஸ்’ போய்விடுகிறது. இருட்டுதான் இருக்கிறது, இதுவும் ஆவிங்களோட சேட்டைதான் என்கிறார்கள் கிராமத்தினர். அநியான வட்டிக்காரர்களின் தொடர் மரணம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
cn

0 comments:

Post a Comment