பொதிக்குள் பெண் உட்பட குழந்தை இறந்த உடலங்கள்

Thursday 20 January 2011

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அரசு பஸ் வந்தது.
இது சென்னை-சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும்.
சென்னையில் இருந்து சேலம் சென்ற பின்பு அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை சங்கராபுரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார்.

நேற்று மாலை வரை அந்த பேக்கை தேடி யாரும் பணிமனைக்கு வரவில்லை. சிறிது நேரத்தில் டிராவல் பேக்கில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஊழியர்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் பணிமனைக்கு விரைந்து சென்று டிராவல் பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது. அதன் கீழே சில துணிகளும், அதற்கு கீழே 1 1/2 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையின் பிணமும் இருந்தது.

இதைப் பார்த்ததும் போலீசாரும், பணிமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை பிணத்தையும், பெண்ணின் தலையையும் போலீசார் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக இருந்த பெண்ணும் குழந்தையும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? டிராவல் பேக்குடன் பஸ்சில் ஏறியவர் எங்கு ஏறினார்? என்று பஸ் டிரைவர் மொட்டையன், கண்டக்டர் கணேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கண்டக்டர் கணேசன் போலீசாரிடம் கூறியதாவது:- சங்கராபுரத்தில் இருந்து கடந்த 18-ந் தேதி காலை சென்னைக்கு சென்றோம். நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல் பட்டு, திண்டிவனம், மேல்மருவத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் சென்று மீண்டும் சேலத்தில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சங்கராபுரம் வந்து சேர்ந்தோம். பொங்கலையொட்டி பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

பல பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கினோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் பிணங்கள் இருந்த டிராவல் பேக்குடன் பஸ்சில் ஏறியது யார்? எந்த ஊரில் பேக் கொண்டு வந்த நபர் ஏறினார்? என்பதை கணிக்க முடியவில்லை. கூட்டம் குறைவாக இருந்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாம். முதலில் பயணிகள் யாராவது தங்கள் உடமைகளுடன் பேக்கை தவற விட்டிருக்கலாம் என்று நினைத்தோம்.
அதில் பிணங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் டிராவல் பேக்குடன் பஸ்சில் ஏறியது யார்? அவர் எங்கு ஏறினார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அடையாளம் காண்பதற்காக பெண் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை வைத்து பிணமாக கிடந்த பெண் யார்? சமீபத்தில் யாராவது அந்த பகுதிகளில் குழந்தையுடன் மாயமாகி உள்ளார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறியதாவது:- டிராவல் பேக்கில் பிணமாக இருந்த பெண் யார்? என்பதை கண்டுபிடித்தால் தான் மேல் கட்ட விசாரணைக்கு செல்ல முடியும் எனவே பெண், குழந்தையின் புகைப்படத்தை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகளை அமைத்துள்ளோம். அவர்களும் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். விரைவில் கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது பற்றிய உண்மை தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்ணின் தலையை வைத்து பார்க்கும்போது அவர் சென்னையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெண்ணின் தலை கிடந்த டிராவல் பேக்கில் சென்னை சைதாப்பேட்டையில் வாங்கியதற்கான முகவரி உள்ளது. சென்னையில் அந்த பஸ் நீண்ட நேரம் நின்ற பின்பு தான் சேலத்துக்கு புறப்பட்டுச்சென்றது. எனவே கொலையாளி பயணிபோல் வந்து பஸ்சில் பையை விட்டுச் சென்றாரா? என்று விசாரணை நடக்கிறது.

சென்னை மற்றும் மாநகர் பகுதியில் தாய்-மகள் காணாமல் போனது குறித்து புகார் எதுவும் வந்துள்ளதா? என்றும் போலீசார் தகவல் சேகரித்து வருகிறார்கள். பேக்கில் பதிவாகி உள்ள கைரேகையை வைத்தும் விசாரித்து வருகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தாய்-குழந்தை மாயமானது பற்றி புகார் வந்துள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment